June 8, 2025
மே நாள்

மே நாள்

இந்தியை எதிர்த்தால் அது தமிழ்மொழி காப்பல்ல. ஆங்கிலத்தை வைத்தால் அது தமிழ்மொழி வளர்ப்பல்ல. இரண்டிற்கும் விடை தந்து தமிழ்மொழி வளர்ப்பதே தன்னாடு, தன்நிலை, தன் உயர்வு என்பதே உலகியலில் அடிப்படை. அதனை விடுத்து பேசுவதற் கெல்லாம் இடம் மாறி இடம் மாறி தமிழர் அலைவது தமிழர் இனத்தை அழிப்பதற்கான சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டோம்.. என்பதே உண்மை.

இந்தியை இன்று எதிர்ப்பவர்கள் இத்தனை காலம் தாய்த் தமிழை வளர்த்ததற்கான இடம் ஏதாவது உண்டா? கேட்டுப்பாருங்கள். அதுபோல் தாய்நாட்டு மொழியான தமிழை ஆட்சி அதிகாரம் என எந்த இடத்திலாவது வடஇந்திய கட்சிகள் எடுத்துப் பேசியதும் உண்டா? அதற்கும் நம் தாய் நாட்டில் பதில் சொல்ல முடியாது.

விடுதலை பெற்ற நாட்டில் மீண்டும் ஒரு அடிமைத்தனம் போல ஆங்கிலம் தானே எல்லோருக்கும் ஒரு மொழிக் கொள்கை?

இந்திய மொழிகளை யாரும் வளர்ப்பதும் இல்லை. வளர்க்கப் போவதும் இல்லை. எல்லா மக்களையும் உயர்த்தி பிடிப்பதற்கே இந்த இருமொழிக் கொள்கையென பேசும் திராவிடமும் மும்மொழிக் கொள்கையென முடிக்கும் வட இந்திய கட்சிகளும். பொதுவுடமை என்பதெல்லாம் மேடை பேச்சுகளாக்கி நிற்கின்றன. பொதுவுடமை பகுத்தறிவு என்பது வெறும் ஆட்சி கட்டில் சுகமாகிப் போய்விட, இந்த இரு மொழிக் கொள்ளையும் மும்மொழி பேச்சுகளும் எகிறி குதிக்க இந்திய மொழிகளும் அதன் பண்பாடுகளும் இலக்கிய வளங்களும் அதன் அறிவுச் செல்வங்களும் காலில் மிதிபட்டு அழியும் நிலையில் கிடக்கின்றனவே.. அதுமட்டுமின்றி நம்மேல் இன்றும் இங்கில்லாத தெய்வங்களின் வருகையும் முதலாளித்துவமும் அல்லவா கோலோச்சுகின்றன. நாம் வருங்காலத்தில் நம் நிலத்திலேயே அந்நிய மொழி படிப்பாளர்கள் ஆகி விடுவோம். அதனையே நாம் எதிர்த்து நில்ல வேண்டும்.

இதனை எல்லா இந்திய மக்களும் உணர வேண்டும். அவரவர் மொழியை அழிந்து விடாமல் காத்து வளர்க்க வேண்டும். அதற்கே அரசுகள் காவல் நிற்க பழக வேண்டும். தமிழர்கள் ஏதோ இந்த தமிழ் மாநிலத்திற்குள் மட்டுமே இருப்பது போல் இங்கே திராவிட கட்சிகள் நம்மை மட்டம் தட்டி வருகின்றன. அதனை மாற்ற வேண்டும்.

கால மாற்றங்களை உணர்ந்து தமிழ்மக்கள் நாமும் வெற்று சுகங்களுக்கு அலைந்து, பிறரின் போலித் தனத்திற்கு கைதட்டி.. மகிழுவதை விடவேண்டும் .

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளில் திராவிட கட்சிகள் ஆட்சி என்ற வடையை சுட்டுத் தின்றனவே தவிர, இந்தி நுழையாத இடம் என எந்த அரசு நிறுவனங்களாவது உண்டா? தமிழ்நாட்டில் நாம் பயணிக்கும் தொடர் வண்டி, வானூர்தி, கப்பற் கூடங்கள், மைய அரசு நிறுவனங்கள் என ஏதாவது ஒன்று உள்ளதா? இவர்கள் தேர்தலுக்கு தேர்தல் மாறிமாறி கூட்டு சேராத வட இந்திய இந்தி திணிப்பு கட்சிகள் தான் உள்ளதா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழர்கள் நாம் சிந்திக்க மறந்தவர்கள் ஆனோம். அதனால், உணர்ச்சிவயப்பட்டு கைத்தூக்கி நிற்கின்றோம்.

உலகம் தோன்றத் தோன்றிய நம் தமிழை முன்னெடுத்து படிக்கவும் பழகவும் அதனை அள்ளி உலகெங்கும் தெளிக்கவும் நம் உலக உறவுகளை கட்டி அணைத்து மகிழவும் தமிழர் நாம் நம் கரங்களை பலப்படுத்த உறுதி யேற்கின்ற நன்னாளாக இருக்க இனிவரும் நாளெல்லாம் அமைய உறுதியேற்போம்!

தமிழ்நாடு என்றால்.. அதன் தனித்தன்மை என்னவென்றே அறியாதவர்களின் கைகளில் ஆட்சியும் அரசியலும். நம்முடைய ஆன்மீக நெறிகளை மறக்கடிக்க ஊர்கள் தோறும் புதுப்புது பாட்டுகள் தெய்வங்கள் என வர, நாம் நம் திருக்கோயில்களில் நம் தெய்வங்களை வணங்கி விதம் விதமான நிறுத்தி வைப்பு கள். அதற்கு ஒவ்வொரு கட்டணம் என பகுத்தறிவு கட்டணங்கள். இன்னமும் எத்தனையோ..

அன்னைத் தமிழ் வாழ சங்கம் அமைத்த அரசர்களை, புலவர்களை, வள்ளல்களை, வள்ளலார்களை, மொழிப்போர் மறவர்களை, எழுத்தாளர்களை, இதன் கொடையாளர்களை, பாணர்களை, இசைவாணர்களை, ஆன்மீக நெறியாளர் பெருமக்களையெனத் தொழுதேற்றி வணங்குவோம்! முத்தமிழ் முழக்க உயர்ந்து நிற்போம்! இனி இப்பெரும் கண்களின் வழியில் எங்கும் தமிழ் கொடி பறக்க.. எடுப்போம் முழக்கம்!

இதுவே தமிழருக்கு நலம் பயக்கும் உண்மை பகுத்தறிவாகும்.

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.