
உசிலம்பட்டியில் சிவராத்ரி ஊர்வலம்.
மதுரை,
உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலின் மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மாசி பெட்டி உசிலம்பட்டியிலிருந்து பாப்பாபட்டியில் உள்ள கோவிலுக்கு பக்தர்களின் ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஒச்சாண்டம்மன் ஆபரணங்கள் அடங்கிய புகழ்பெற்ற மாசி பெட்டி உசிலம்பட்டி சின்னக்கருப்ப சாமி கோவிலிலிருந்து பாப்பாபட்டி கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஆபரணங்கள் அடங்கிய இந்த மாசி பெட்டிகளை பூசாரிகள் கோடாங்கிகள் மேளதாங்கள் முழங்க உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்து அன்னம்பாரிபட்டி, வடகாட்டுப்பட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி வழியாக பாப்பாபட்டிக்கு எடுத்து செல்கின்றனர்.

மாசி பெட்டி செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு இன்று இரவு பெட்டிகள் சென்றடையும் சூழலில் இரவு சிவராத்திரி பூஜையை முடித்துவிட்டு நாளை மறுநாள் மீண்டும் உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்படும்.
உசிலம்பட்டிக்கு வரும் போது பூசாரிகள் ஆனி செருப்பில் நடந்து வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள் இந்த காட்சியை காண உசிலம்பட்டியின் நகர் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.