
பக்தர்களை கடிந்து கொள்ளும் பழனி கோயில் காவலர்கள் இணை ஆணையர் மாரிமுத்து செல்வராஜ் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.!
இணை ஆணையர் மாரிமுத்து செல்வராஜ் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தைப்பூசம் முடிந்த பிறகு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.

முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலர் கடும் வெயில் காரணமாக ரோப்கார் மற்றும் வின்ச் ரயில் இயக்கும் இடத்திற்கு செல்ல அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக இயக்கப்படும் பேட்டரி வாகனங்களில் பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பேட்டரி வண்டியில் கோயில் காவலர்கள் இரண்டு பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைக்கு செல்லும் போதும் , முருகனை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போதும் பேட்டரி வாகனத்தில் ஏறும் பக்தர்களை ஒருமையில் பேசுவதாக புகார் எழுந்துள்ளது. ‘ இதுல ஏறாத பின்னாடி வேற வண்டி வரும் அதுல ஏறி வா ‘ என மரியாதை குறைவாக பேசுவதாகவும், பக்தர்களை கடிந்து கொள்வதாகவும், புகார்கள் எழுந்துள்ளன.
மன நிம்மதிக்காக முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களை வயது வித்தியாசம் இல்லாமல் நடத்துவது வருத்தம் அளிப்பதாக கூறுகின்றனர்.
பேட்டரி வாகனத்தில், வாகனத்தை இயக்கும் ஒருவர் மட்டும் பயணித்தால் போதுமானது. ஆனால், இரண்டு கோயில் காவலர்கள் ஏறி அமர்ந்து கொண்டு பக்தர்களை அதிகாரம் செய்வது வாடிக்கையாகி விட்டது.
பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பேட்டரி வாகனங்கள் இலவசமாக இயக்கி வருகிறது. அதனை மக்கள் சவுகரியமாக பயன்படுத்த சுதந்திரம் உள்ளது. பணியில் இருக்கும் சில கோயில் காவலர்கள் செய்யும் அராஜகத்தால் முருகனை தரிசனம் செய்து விட்டு மனம் நொந்து செல்கின்றனர். இந்த விசயத்தில் பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து செல்வராஜ் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் காவலர்களிடம் , முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் மரியாதையோடு நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது பொதுமக்கள் , பக்தர்கள் என அனைவருக்கும் பொதுவானது.
பணியில் இருக்கும் நபர்கள், பக்தர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேவையற்ற வார்த்தையில் வசைபாடுவதும் , அதிகார தோரணையில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதே பக்தர்களின் மனக்குமுறலாக உள்ளது.