
உசிலம்பட்டியில், வழக்கறிஞர்கள் போராட்டம்
வழக்கறிஞர்களின் கருப்பு தினத்தை முன்னிட்டு ,
உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் பல வழக்கறிஞர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்த நாளான பிப்ரவரி 19ஆம் தேதியை தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள்
சங்கம் சார்பில் வழக்கறிஞர்களின் கருப்பு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி சார்பு நீதிமன்றம், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களை வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு செய்துள்ளதோடு, கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர்.
வழக்குகளில் வழக்கறிஞர்கள் வாதாடாத சூழலில் சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட மூன்று நீதிமன்றத்திலும் இன்று விசாரணைக்கு வந்த வழக்குகளை நீதிபதிகள் மறுதேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.