
மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு காமராஜர் பெயர் அகில இந்திய தமிழர் கழகத் தலைவர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு காமராஜர் பெயர் சூட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக முத்துக்குமார் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப் பாலம் இந்தியாவிலேயே பிரசித்தி பெற்றதாகவும், பிரமிக்கக் கூடியதாகவும் இருந்துக் கொண்டிருக்கிறது. இந்த பாலம் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் நேரடி முயற்சியால், இயற்கை வளம் மற்றும் விவசாய மேம்பாட்டை முன்னிறுத்தும் வகையில் கட்டப்பட்ட பாலமாகும்.
மேலும் காமராஜர் நாகர்கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி யாகவும் தேர்வு செய்யப் பட்டதால் , மாத்தூர் தொட்டிப் பாலம் அவரது நேரடி கண்காணிப்பிலே இருந்திருக்கிறது.
எனவே மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அதனை மனுவாக ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு ,” தாங்கள் அனுப்பியுள்ள மனுமீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு விபரம் தெரிவிக்கப்படும் ” என்று விளக்கம் தெரிவித்துள்ளது.
எனவே மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட அரசு முன் வரும் பட்சத்தில், மாத்தூர் தொட்டிப் பாலம் காலாக்காலத்திற்கும் காமராஜரின் பெயரை பிரதிபலிக்கும் நினைவு சின்னமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்று தெரிவித்தார்.
இந்த மாத்தூர் தொட்டிப் பாலத்தில் காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டை கடந்த 11- ஆம் தேதி விஷமிகள் சேதப்படுத்தியதை தொடர்ந்து, அதே இடத்திலேயே புதிதாக கல்வெட்டை அரசு தரப்பில் வைக்கப் பட்டுள்ளது குறிப்பிட தக்கது.