
தேனி மாவட்டம் பெரியகுளம் கச்சேரி ரோடு பகுதியில் பெரியகுளம் நகராட்சிக்கு எதிர்புறம் செயல்பட்டு வரும் பிரம்ம ஞான மந்திரம் (எட்வர்ட் நடுநிலை பள்ளி) பள்ளியில் வெறிநாய் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மதிய உணவுகளை பள்ளி வளாகத்தில் மண் தரையில் அமர்ந்து சாப்பிடும் அவல நிலை உள்ளது.பள்ளி நிர்வாகம் மாணாக்கர்கள் உணவு அருந்துவதற்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்தி தராதது இதன் காரணமென்றும், மேலும் பள்ளி வளாகப் பகுதிகளுக்குள் அதிக அளவில் நாய்கள் தொல்லை உள்ளதாகவும், சாப்பாட்டு நேரங்களில் பள்ளி மாணவிகள் சாப்பிடும் சாப்பாட்டில் நாய்கள் வாய் வைப்பதாகவும் , மாணவர்களின் சாப்பாட்டினை நாய்கள் பறித்து செல்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.
இவை சம்பந்தமாக பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும், மரத்தடி நிழலில் வகுப்பறைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்குற்றம் சாட்டினர்.
பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வெறிநாய் தொல்லையிலிருந்து மாணவர்கள் காக்க வேண்டுமாய் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






