
போலீசாரை கல்லால் தாக்கிவிட்டு கஞ்சாவுடன் தப்ப முயன்ற இரு இளைஞர்கள் கைது – விசாரணையில் பகீர் தகவல்.
நேற்றிரவு தன்பாத் – ஆலப்புழா விரைவு ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு செண்ட்ரல் சாணிக்குளம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து இறங்கிய இரண்டு இளைஞர்கள் ஓட முயன்றுள்ளனர். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால், அந்த இளைஞர்கள் கல்லால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளனர். இதில், ரயில்வே பாதுகாப்பு படை காவலர் வேலனுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்த நிலையில், போலீசார், சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்த ஆலன் (21), அஷ்வின் (22) ஆகியோர் என்பதும், இவர்கள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் சென்ட்ரல் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.