June 9, 2025
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழி குப்பைகளை அகற்றும் பணியில் தானே முன்நின்று குப்பைகளை சேகரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழி குப்பைகளை அகற்றும் பணியில் தானே முன்நின்று குப்பைகளை சேகரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

காரியாபட்டி:

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கௌசிகா மகாநதி பாலத்தை சுற்றியுள்ள பகுதியில் கொட்டப்பட்டிருக்கும் நெகிழி கழிவு சேகரிப்பு பணியினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து ஒவ்வொரு மாதமும் 4வது சனிக்கிழமையன்று நெகிழி கழிவுகளை அகற்றி முறைப்படி அப்புறப்படுத்தும் மாபெரும் திட்டம் இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இலவச மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும் என்று நம்முடைய அரசு உறுதி கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை நாம் துவங்கி இருக்கிறோம். இது ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும். பல இடங்களில் இத்தகைய உணவுப் பொருட்களை உபயோகப்படுத்தக்கூடிய பைகள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைப்பதோடு, உடல்நலத்திற்கும் பெரியளவில் தீங்கு விளைவிப்பதாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.

அந்த வகையில், மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் இன்று நான் தொடங்கி வைத்திருக்கிறேன் எனக் கூறினார்.

அடுத்த வரும் பட்ஜெட் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இனி வருங்காலங்களிலும் திமுக அரசுதான் பட்ஜெட் போடும். ஜி.எஸ்.டி வந்த பிறகு வரிவிதிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் சென்றுவிட்டதால் பட்ஜெட் வரி இல்லாத பட்ஜெட்டாகத்தான் போட முடியும் எனத் தெரிவித்தார்.

இதில், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நெகிழி பயன்பாட்டைத் தவிர்ப்பது மட்டுமின்றி அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்தபடுவதன் அவசியம் குறித்து விவரிக்கப்பட்டது. தொடர்ந்து, நெகிழி ஒழிப்பு தீர்மானத்தை வாசிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அமைச்சருடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மித்ரு நாகேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.