
நீலகிரி வரையாடுகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம், மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் நீலகிரி வரையாடுகள் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் மாவட்ட வன அலுவலர் சமர்தா, திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (நீலகிரி வரையாடு திட்டம்) கணேசன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். வரையாடு என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் நீலகிரி வரையாடு” மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது. இது புவிஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின் மீது ஏறும் திறன்களுக்காக புகழ் பெற்றது. நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக 2001 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
வரையாடுகள் தற்பொழுது அழிந்து வரக்கூடிய இனங்களின் பட்டியலில் உள்ளது. நீலகிரி வரையாடுகள் திட்டமானது வரையாடுகள் பற்றிய எண்ணிக்கை மற்றும் சூழலியல் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்குகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில விலங்கு வரையாடுகள் காப்போம், புல்வெளி காடுகள் காப்போம் என்ற மையகருத்தினை கொண்ட இத்திட்டம் பற்றி தெரிந்தவர்கள் தெரியாதவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, அரும்புகள் அறக்கட்டளை (திருநெல்வேலி) நிறுவனர் மதிவாணன், வனத்துறை பசுமை தோழர் பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.