March 2, 2026
சோழவந்தானில் நிழற் குடைகள் அமைத்து தர தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி க்கு கோரிக்கை...

சோழவந்தானில் நிழற் குடைகள் அமைத்து தர தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி க்கு கோரிக்கை...

சோழவந்தான் நவம்பர் 16

மதுரை மாவட்டம் சோழவந்தானின் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் நிழற் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் மாணவ மாணவிகள் வியாபாரிகள் என பேருந்துக்காக காத்திருக்கும் பலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நிழற்குடைகள் இல்லாததால் மழையில் நனைந்து பல மணி நேரம் நின்றவாறு பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மருது மகால் வட்ட பிள்ளையார் கோவில் பேட்டை பசும்பொன் நகர் தபால் அலுவலகம் காமராஜர் சிலை மின்வாரிய அலுவலகம் காவல் நிலையம் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லாத தால் 30 முதல் 50 நபர்கள் வரை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மழையிலும் வெயிலிலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

குறிப்பாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மருது மகால் முன்புறம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பேருந்துக்காக காத்திருக்கும் போது பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் விரும்பத்தகாத நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதே போல் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நிழற் குடை இல்லாததால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

ஆகையால் பொதுமக்கள் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்., என வேண்டுகோள் விடுத்துள்ளனர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சோழவந்தான் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்து தர நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *