March 2, 2026
விக்கிரமங்கலம் முதல் சென்னம்பட்டி வரை உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை...

விக்கிரமங்கலம் முதல் சென்னம்பட்டி வரை உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை...

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் முதல் செல்லம்பட்டி வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, விக்கிரமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்வதற்கு முக்கிய சாலையாக உள்ள கொடிக்குளம் பிரிவு முதல் செல்லம்பட்டி வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையானது குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது.

இந்த வழியாக, சோழவந்தானிலிருந்து உசிலம்பட்டி செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

மேலும் உசிலம்பட்டி பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய மாணவ மாணவிகள் மற்றும் விவசாயப் பணிகளுக்கு செல்பவர்கள் இந்த சாலையை முக்கியசாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த சாலையானது போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருப்பதால்,
பேருந்து செல்லும்போது குலுங்கி குலுங்கி செல்லும் நிலையில் பேருந்தில் செல்லும் பயணிகள் ஒருவகையான மன அழுத்தத்தில் அசௌகரியமான நிலையில் சென்று வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இதனால் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தங்களது பணிகள் பாதிக்கப்படுவதாகவும், குற்றம் சாட்டுகின்றனர்.

பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ள விக்கிரமங்கலம் செல்லம்பட்டி சாலையை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி செல்பவர்கள் விவசாய பணிகளுக்கு செல்பவர்கள் ஆகிய அனைவரின் நலன் கருதி உடனடியாக சீரமைக்க வேண்டும், புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *