
நாடு போற்றும் நல்லாசிரியர்களுக்கு கல்விச் செம்மல் விருது விழா.!
பொள்ளாச்சி, 5 –
உலக ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கல்விச்செம்மல் விருது வழங்கும் விழாவினை பொள்ளாச்சி மசானிக் சேவை அமைப்பு, ஸ்ரீ ராகவேந்திரா மக்கள் இயக்கம், இந்திய அரசு நேரு யுவகேந்திரா ஆகிய அமைப்புகள் இணைந்து பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் வளாகத்தில் நடத்தியது.
இதில் பொள்ளாச்சி இருதய நோய் சிறப்பு மருத்துவர் ராமகிருஷ்ணன் தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.
மசானிக் சேவை அமைப்பின் தலைவர் வெங்கடேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் சம்பத்குமார், காவல்துறை எழுத்தர் கவிதா, பட்டீஸ்வரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் கசக்கும் கணிதத்தை கற்கண்டு கணிதமாக மாற்ற பாடல் வழியில் கற்பித்து வருவதைப் பாராட்டியும், பை என்ற கணித மன்றத்தை ஏற்படுத்தி கற்றல் கற்பித்தல் கருவிகளை மாணவர்களே தயாரிப்பதை பாராட்டியும், 27 ஆண்டு காலமாக கல்விச்சேவையில் சிறப்பாக பணியாற்றி வரும் வால்பாறை கணித ஆசிரியர் வசந்தகுமார் அவர்களை தேர்வு செய்து கல்விச்செம்மல் விருதினை டாக்டர் இராமகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் செந்தில் ராகவேந்திரா நன்றி கூற விழா முடிவடைந்தது.
விருது பெற்ற ஆசிரியரை பல்வேறு ஆசிரிய அமைப்புகள் மற்றும் சமூக சேவகர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.






