
ஹாஜி கருத்த ராவுத்தர் என்ற மிகச் சிறந்த அறப்பணியாளர் மக்கள் நலனுக்காக உருவாக்கியவை ஏராளம்.
ஒரு விவசாய குடும்பத்தில் 1888 ல் பிறந்து 1958 வரை வாழ்ந்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலம் பல அற்புதங்களைச் சொல்கிறது.
1920-23 ஆண்டுகளில் அகன்ற மதுரை மாவட்டம் முழுவதும் பிளேக் எனும் கொடிய நோய் பரவி எண்ணிக்கையில் அடங்கா மரணங்கள் சம்பவித்த நேரம். ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்கள் தனது சொந்த பணத்தில் மருத்துவர்களையும், அதற்கான மருந்துகளையும் கொண்டு வந்து குவித்தார். அதனால் அனைத்து சமூக மக்களும் பயன்பெற்றனர்; சுகம் பெற்று மீண்டனர்.
அப்பகுதியில் ஒரு மகப்பேறு மருத்துவமனை இல்லாமல் தாய்மார்கள் அவதியுற்ற நிலை அறிந்து 1953 லேயே தனது சொந்த இடத்தில் தானே முழு செலவையும் ஏற்று மகப்பேறு மருத்துவமனையை உருவாக்கி இன்றளவும் பொதுமக்கள் பயன்பெற்று வருவதைக் காண முடிகிறது.
விடுதலை வேட்கையில் ஆழ்ந்து மகாத்மா காந்தியுடன் கைகோர்த்து ஒத்துழையாமை மற்றும் கிலாபத் இயக்கங்களில் அவர் ஆற்றிய பணிகள் அற்புதமானவை. தனது வாழ்நாள் முழுவதும் ஜாதி மதம் பாராது மனித நேய உணர்வோடு வாழ்ந்து அனைவருக்குமான அழகிய முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறார்.
அதேபோல் 1955ல் ஹாஜி கருத்த ராவுத்தர் அரசு மருத்துவமனையை உருவாக்கித் தந்திருக்கிறார். தமிழக வரலாற்றில் ஓர் அரசு மருத்துவ மனை தனியார் பெயர் சேர்த்து அழைக்கப்படுவதை அங்குதான் பார்க்க முடிந்தது.
கல்லூரி, மேல்நிலைப் பள்ளிக்கூடம், மதரஸா, பள்ளிவாசல்கள் என அவர் செய்த அர்ப்பணிப்புகள் அப்பகுதி மக்களுக்கான அற்புதப் பணிகள் எனலாம். அவரின் மறைவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கல்லூரி கட்டுமானப் பணிகள் முடிவுற்று முதலமைச்சர் காமராஜர் அவர்களைக் கொண்டு திறந்துவைத்திருக்கிறார்.
ஹாஜி கருத்தராவுத்தர் பெருந்தகை அவர்களுடைய நன்முயற்சியால், கொடையால் உருவான உத்தமபாளையம் அரசு மருத்துவமனை. அந்த ஆளுமையின் பெயரில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி் வந்ததுள்ளது.
இப்போது அந்த மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு புதுப் பொளிவு பெற்றது மகிழ்வூட்டுகிறது ஆனால் அதில் ஹாஜி கருத்த ராவுத்தர் பெயர் நீக்கப்பட்டு வெறும் அரசு மருத்துவமனை என்றுள்ளது அதிர்ச்சியடைய வைக்கிறது.
முஸ்லிம்களின் தியாக வரலாற்றை மறைக்கும் பாணி பாஜகவுடையது. திராவிட மாடல் அரசு அதை தவிர்த்து கொள்வதே அழகு.. சிறப்பு.
பொது நலனுக்காக பெரு முயற்சி செய்த அந்த கொடையாளரின் வரலாறுகள் வருங்கால சந்ததிகளுக்கு தெரியாமல் போய் விடக் கூடாது. இதுபோன்றவை இனியும் நிகழாமல் இருக்க தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
முனைவர் தமீமுல் அன்சாரி நிஜாமி தேசிய செயலாளர் Socialist Party – India