
விசாகத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட்டம்.
மதுரை:
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் – கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வரும் ஜூன் ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் உள்ள கந்தசஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது .

கூட்டத்திற்கு, திருமங்கலம் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை வைத்தார். கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி,பாதுகாப்பு வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள்,
தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
வைகாசி விசாகத்தன்று பாதுகாப்புக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாக தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது,வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கிரிவலப் பாதை, நான்கு ரத வீதிகளில் போக்குவரத்திற்கு தடை விதித்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவில் அறங்காவலர் குழுவினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.