June 8, 2025
ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கவில்லை என்பதற்காக 25 வயது இளம்பெண் கொடூரமாக சித்தரவதை செய்து கொலை!

கொலை செய்த கயவனை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து TARATDAC மறியல் போராட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் கோம்பைப்பட்டி ஊராட்சியை சேர்ந்த முருகன் என்னும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் பார்வதியை திண்டுக்கல் ஒன்றியம் சிறுமலையில் உள்ள செல்வகுமார் என்பவனுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பார்வதிக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் மூத்த மகள் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார்.

இந்நிலையில், தொடர்ச்சியாக மூன்றும் பெண் குழந்தையாக இருப்பதாலும், ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை என்பதற்காகவும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செல்வகுமார் மற்றும் அவரது தாய், தந்தையர் பார்வதியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அவ்வப்போது பார்வதியின் பெற்றோர் சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 28.05.25 அன்று பார்வதிக்கும் அவரது கணவருக்கும் இப்பிரச்சனை தொடர்பாக சண்டை முற்றியுள்ளது. அப்போது செல்வகுமார் தனக்கு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்றால் தான் இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் அதற்கு இடையூறாக பார்வதி இருக்கிறார் என்பதால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து கொடூரமாக தாக்கியுள்ளார்.

சண்டை வந்தால் வெளியில் பார்வதி ஓடி விடுகிறார் என்பதற்காக முதலில் பார்வதியின் காலை உடைத்துள்ளான். பிறகு பிரம்பால் உடல் முழுவதும் ரத்தக்கட்டு வரும்வரை நன்றாக அடித்துள்ளான். அப்போதும் வெறி அடங்காத நிலையில் இந்த உருப்புதானே எனக்கு ஆண் குழந்தையை பெற்றுக்கொடுக்க மறுக்கிறது அந்த உறுப்பே இருக்கக்கூடாது என்று பெட்ரோல் ஊற்றி பெண் உறுப்பில் தீ வைத்துள்ளான். அதுமட்டுமின்றி பெரிய கட்டையை எடுத்து மண்டையில் பலமாக தாக்கியுள்ளான்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 29.05.25 அன்று திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பார்வதியின் பெற்றோருக்கு தகவல் சொல்லி உங்கள் மகள் உடல் நலமில்லாமல் இருக்கிறாள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் என்று தகவல் சொல்லியுள்ளான். நன்றாக இருந்த மகள் எப்படி திடீரென உடல் நலமில்லாமல் போவாள் என்ன ஆனதோ தெரியவில்லை என பெற்றோர் பதறி அடித்து வந்து பார்த்தபோது செல்வகுமார் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அதன்பிறகு செவிலியர்களும், மருத்துவர்களும் கூறிய பிறகுதான் தனது மகளுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது என்பதையே பார்வதியின் பெற்றோரால் உணர முடிந்தது. இந்த நிலையிலும் பார்வதி தனக்கு நேர்ந்த கொடுமையை மெல்லிய குரலில் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பார்வதி கூறியதையும், மருத்துவர்கள் கூறியதையும் வைத்து என்ன செய்வது என தவித்துக்கொண்டிருந்த நிலையில் அன்றைய தினம் இரவு பத்து மணியளவில் (சம்பவம் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டத்தில் ஆனால், சிறுமலையில் இவர்கள் குடியிருக்கும் பகுதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் வருவதால்) வாடிப்பட்டி காவல் துறையினர் புகாரை பதிவு செய்துள்ளனர்.

புகார் பதிவு செய்யப்பட்டு நான்கு நாட்கள் கடந்த பின்னரும் சம்மந்தப்பட்ட குற்றவாளி செல்வகுமார் மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்யாமல் இருப்பது சரியல்ல என பார்வதியின் பெற்றோர் தொடர்ச்சியாக வலியுறுத்திய நிலையில், நேற்று (02.06.25) மாலை வாடிப்பட்டி காவல் நிலையம் சென்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் சென்று கேட்டபோதுதான் அவர்கள் அப்போதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படவில்லை என்கிற தகவலே கிடைத்தது. பின்னர் சங்க நிர்வாகிகள் கடுமையாக எச்சரித்த பின் இரவு 09.00 மணியளவில் வாடிப்பட்டி காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (03.06.25) அதிகாலை 12.30 மணியளவில் பார்வதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இவ்வளவு பெரிய கொடூரம் நடந்த பிறகும் காவல்துறை மெத்தனமாக செயல்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யாதது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகப்பெரிய மன வருத்தத்தை ஏற்ப்படுத்தியது. இனிமேலும் இதை தாமதிக்க கூடாது என்கிற அடிப்படையில் இன்று (03.06.25) காலை 10.00 மணியளவில் இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திரட்டி குற்றவாளி செல்வகுமார் மற்றும் அவரது தாய் தந்தையரை கைது செய்யாத வாடிப்பட்டி காவல்துறையை கண்டித்து TARATDAC சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகவள்ளி, மாவட்ட துணை செயலாளர்கள் ஸ்டாலின், கருப்புச்சாமி, நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் மரிய ஜெயப்பிரகாஷ், மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தை ஒட்டி பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சம்மந்தப்பட்ட குற்றவாளி செல்வகுமாரை இன்று காலை கைது செய்து விட்டதாகவும் அவரது குடும்பத்தாரை தேடி வருவதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி ஆறு வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் உள்ளதால் அவர்களுக்கு அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்திய நிலையில் அதை காவல் துறையினர் முழுமையாக ஏற்றுக்கொண்ட அடிப்படையில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.