
பெரியகுளத்தில் 64 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நேற்று துவக்கம்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துரைராமசிதம்பரம் நினைவு விளையாட்டு அரங்கில் நடைபெறும். நேற்று நடைபெற்ற போட்டிகளை ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையின் பொது மேலாளர் ஞானசேகரன் துவக்கி வைத்தார்.
பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் விளையாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழக துணைத்தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் தமிகா சுல்தானா, மற்றும் பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் கீதா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் இந்தியாவின் தலைசிறந்த அணிகளான, புதுடெல்லி இந்திய விமானப்படை அணி, புதுடெல்லி தரைப்படை அணி, லோனோ வாலா வைச் சேர்ந்த இந்திய கப்பல் படை அணி, பேங்க் ஆப் பரோடா பெங்களூரு, கேரளா மின்வாரியம், இந்தியன் வங்கி சென்னை, தெற்கு ரயில்வே சென்னை, உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழகம் பெரியகுளம் அணியுடன், கோவையைச் சேர்ந்த ராஜலட்சுமி கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கோவை ராஜலட்சுமி கூடைப்பந்து கழக அணி 85- 38 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பேகாசஸ் மதுரை அணியுடன், தேனி எல் எஸ் மில் அணி விளையாடியது.
இதில் மதுரை பெகாசஸ் அணி 84-73 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது நடைபெற்ற போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழக, கிரீன்ஸ் அணியுடன் அணியுடன், சென்னை ஜெயராமன் கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் சென்னை ஜெயராமன் கூடைப்பந்து கழக அணி 94-53 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில், சென்னை காவல்துறை அணியுடன், கம்பம் பென்னிகுக் அணி விளையாடியது.
இதில் சென்னை காவல்துறை அணியினர் 58- 39 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர். மேலும் தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி வரை லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும். மேலும் போட்டிகளில் வெற்றி பெரும் அணிகளுக்கு முதலாவது பரிசாக பிடி.சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசாக அழகு சங்கரலிங்கம் செட்டியார் நினைவு சுழற்கோப்பை மற்றும் 40 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.
மூன்றாவது பரிசாக பொன்னையா நாயுடு சீதை அம்மாள் நினைவு சுழற்கோப்பை மற்றும் 30 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது, நான்காவது பரிசாக செல்வகுமாரபாண்டியன் நினைவாக சுழற்கோப்பை மற்றும் 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறந்த விளையாட்டு வீரருக்கு தேனி அருண் மோட்டார் வழங்கும் ஹீரோ பைக் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் சில்வர் ஜூப்ளி விளையாட்டுக் கழக செயலாளர் பிசி.சிதம்பரசூரியவேலு மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.