
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு பங்குனி உத்திரத் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த 5ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் முத்தரித்து பாதயாத்திரையாக வந்து பழனிமுருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. புகழ்பெற்ற பங்குனித் தேரோட்டம் இன்று (11.04.2025) மாலை நடைபெற்றது. பழனி அடிவாரம் கிரிவீதியில் நின்ற தேரில் அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானை சமேதராக தேரேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி நான்கு கிரி வீதிகளிலும் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.

வருகிற 14-ம் தேதி புதன்கிழமை அன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடைகிறது. இத்தேரோட்டத்தில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.