
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடி உணவருந்திய கலெக்டர்
தேனி மாவட்டம், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம், திடக்கழிவு மேலாண்மை பணிகள், காலை உணவுத்திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் இதரப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், ஆய்வு மேற்கொண்டார்.
ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களின் வருகைப்பதிவேடு மற்றும் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆண்டிபட்டி பேரூராட்சியின் சார்பில் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து பெற்று அதனை திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை உரங்கள் மற்றும் மண்புழு உரங்கள் தயார் செய்யப்படுதையும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணிகளையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காமராஜர் நகர் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்குகிறார்களா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் மூலம் தேவையான குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா? என அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.
பிச்சம்பட்டியில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி, ஜோதி வித்யாசாலை தொடக்கப்பள்ளி, கன்னியப்பப்பிள்ளைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு உணவின் தரம் மற்றும் சுவை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி ஆய்வு மேற்கொண்டார்.
கொத்தப்பட்டி பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் தினசரி வருகை பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், விடுதியில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.