
தேனியில் மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான 4-ஆவது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் முதன்முறையாக தேனி மாவட்டத்தில் நடைபெறுகிறது.
2024-2025-ஆம் கல்வி ஆண்டிற்கான 14 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கான 4-ஆவது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் 06.02.2025 முதல் 11.022025 வரை கால்பந்து, வளைகோல் பந்து, கபடி, கோ-கோ. கையுந்துபந்து, கூடைப்பந்து, எறிபந்து, கைப்பந்து, பூப்பந்து, மேசைப்பந்து, இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் முதலிய 12 வகையான குழு விளையாட்டுப் போட்டிகள் தேனி மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகள் 06.02.2025 முதல் 08.02.2025 வரை மாணவியர்களுக்கும். 09.02.2025 முதல் 11.02.2025 வரை மாணவர்களுக்கும் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 5172 மாணவர்களும், 5172 மாணவியர்களுமாக மொத்தம் 10,344 பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், துணைத்தலைவர் செல்வம், திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு மாணவ, மாணவியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.