
பாளையங்கோட்டை CSB (Catholic Syrian Bank )வங்கி முற்றுகை!
:அப்பாவி உழைக்கும் மக்களின் அடமான நகைகளை சட்டத்திற்கு புறம்பாக, ஏமாற்றி , திருடி விற்று வரும் பாளையங்கோட்டை , ரயில்வே கேட் ராஜேந்திரன் நகர் அருகே உள்ள CSB (Catholic Syrian Bank )வங்கி:
முற்றுகை:
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு அரியகுளம் ஊரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான பானுப்பிரியா வயது 33 என்பவர் கடந்த ஆண்டு 2024 செப்டம்பர், பாளையங்கோட்டை , மெயின் ரோடு ராஜேந்தரன் நகர் முகப்பில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான கத்தோலிக் சிரியன் வங்கியில் ( CSB Bank) , தனது குடும்ப வறுமை காரணமாக சுமார் 16 பவுன் நகைகளை அடமானம் வைத்திருந்தார்.

மூன்று மாதம் கழித்து அசலும் வட்டியும் சேர்த்து , தனது நகைகளை திருப்ப வங்கிக்கு சென்ற போது , வங்கி நிர்வாகம் , “உங்களது நகைகள் இங்கே இல்லை , வேறொரு நபர் கொண்டு சென்று விட்டார் நீங்கள் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்கள்.
உடனடியாக அதிர்ச்சி அடைந்த பானுப்பிரியா வங்கி நிர்வாகத்திடம் சண்டையிட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மேற்கண்ட சிஎஸ்பி பேங்க் நிர்வாகத்தை பிடித்து ஒன்பது பவுன் நகைகளை பெற்றுக் கொடுத்திருந்தனர்.
மீதி நகையை கேட்ட போது வங்கி நிர்வாகம் , கால அவகாசம் கேட்டது.
அதன் பின் தொடர்ந்து கடந்த மூன்று மாத காலமாக , காவல் நிலையத்திற்கும் வங்கி நிர்வாகத்திற்கும் நகைகளை கேட்டு சென்றபோதெல்லாம் , முறையாக எந்த ஒரு பதிலும் தராமல் அலைகழித்து வந்தனர்.
நேற்று ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றபோது எதேச்சையாக பானுப்பிரியா அவர்களின் பிரச்சனையை தொடர்பாக பேசிய போது , தன்னுடைய நகையை , “வங்கி நிர்வாகம் ஏமாற்றி என்னை அலைகழித்து வருவதாகவும் , வங்கி நிர்வாகம் எனது நகைகளை எனக்குத் தெரியாமல் விற்று விட்டதாகவும், வங்கி நிர்வாகம் மிரட்டல் விடுத்து வருவதாகவும்”, கண்ணீர் விட்டு அழுதார்.
உடனடியாக இன்று , பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையிடம் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் சார்பாக கேட்டபொழுது , இன்று மாலை அந்த வங்கியில் இருந்து , நகைகளைப் பெற்றுத் தருவதாக பதில் அளித்தனர்.
ஆனால் வங்கி நிர்வாகம் தர மறுத்தது மட்டுமின்றி , மீண்டும் எங்கள் முன்னிலையிலேயே , அந்த அப்பாவி பெண்ணை ஏமாற்ற பார்த்தனர்.
உடனடியாக திராவிட தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை மற்றும் தமிழர் உரிமை மீட்புக் களம் அமைப்புகளின் தோழர்களுடன் இன்று வங்கியை இழுத்து மூடி முற்றுகையிட்டபோது , நகைகளை நாளை காலை 11மணிக்குள் ஒப்படைத்து விடுவதாக தெரிவித்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், எமது தோழர்களுடன் முற்றுகையிட்ட போது, அங்கே இஸ்லாமியர் ஒருவர் வங்கியில் இருந்தார் . அவர் எங்களிடம் வந்து நன்றி சொன்னார். “தன்னுடைய 260 கிராம் நகைகளை இதே போல ஏமாற்றி வெளியில் விற்றுவிட்டனர். நீங்கள் அனைவரும் வங்கியின் கதவை இழுத்து மூடி போராடியதால் , என்னுடைய நகைகளையும் நாளை தந்து விடுவதாக சொன்னார்கள் ” என்றார்.
மாநில அரசும், காவல் துறையும் ஏழை மக்களின் , குடும்ப சூழ்நிலை காரணமாக அடமானம் வைத்த நகைகளை , அவர்களுக்கு தெரியாமலேயே , விற்று மிரட்டல் விடுத்து வரும் CSB வங்கி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், தனியார் வங்கிகளை முறையாக கண்காணிக்கும்படியும் அனைத்து சனநாயக இயக்கங்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
களத்தில்…
திராவிடத் தமிழர் கட்சி
பொதுச் செயலாளர் அண்ணன் கதிரவன்
மாவட்டச் செயலாளர் அண்ணன் கருமுகிலன் மற்றும் பொறுப்பாளர்கள்
தமிழ்ப் புலிகள் கட்சி
மாநில துணைச் செயலாளர் அண்ணன் தமிழரசுதமிழ்ப்புலிகள்
மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ்மணி,
தோழர் வள்ளுவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் முத்துவளவன் நெல்லை
தேவேந்திர குல மக்கள் முன்னேற்றப் பேரவை
தென்மண்டல அமைப்புச் செயலாளர் தோழர் மங்கள்ராஜ் பாண்டியன்
மற்றும்
லெனின் கென்னடி
ஒருங்கிணைப்பாளர்
தமிழர் உரிமை மீட்புக் களம்-தலைமையகம்






