
கன்னடத்து பைங்கிளி.. நம்மிடத்து பூங்கிளி' புன்னகை மாறாத சரோஜாதேவி பிறந்தநாள்!
தன் திரைப்பயணத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்த கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி இன்று தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை இந்துஸ்தான் டைம்ஸ் பகிர்ந்து கொள்கிறது.
கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி பிறந்த நாள் இன்று இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை இங்கு திரும்பி பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் மைசூர் ராஜியத்தில் 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தார். அவரது தந்தை பைரப்பா. தாய் ருத்ரம்மா. சரோஜா தேவி வீட்டின் நான்காவது மகளாக பிறந்தார் பெற்றோர் அவருக்கு ராதா தேவி என பெயரிட்டனர்.
சிறுவயதிலேயே சரோஜா தேவியை பெற்றோர் நடனம் கற்றுக்கொள்ள ஊக்கு வித்தனர். பின்னாளில் அவரை நடிப்பு பயணத்தையும் அவரது தந்தை ஊக்கு வித்தனர்.
திருமணம்
சரோஜா தேவி 1967 மார்ச் 1 அன்று பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீ ஹர்ஷாவை திருமணம் செய்து கொண்டார்.
சரோஜா தேவிற்கு மூன்று குழந்தைகள். அதில் புவனேஸ்வரி என்பவர் அவர் தத்து எடுத்த குழந்தை. அவரது இறப்பிற்கு பின்பு அவர் நினைவாக அவரது பெயரில் புவனேஸ்வரி விருதுகள் என்று இலக்கியத்திற்க்காக வழங்கப்படுகிறது. இவருக்கு மேலும் 2 குழந்தைகள். இந்திரா, இந்திரா காந்தியின் நினைவாகவும், கவுதம் ராமசந்திரன், எம் ஜி ராமச்சந்திரன் நினைவாகவும் பெயர் வைத்துள்ளார்.
திரைப்பயணம்
1955ம் ஆண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இதையடுத்து திரை உலகிற்காக ராதா தேவி என்ற தன் பெயரை சரோஜா தேவி என்று மாற்றி கொண்டார்.
தமிழ் திரையில் சரோஜா தேவி
கன்னட பட வெற்றியை தொடர்ந்து தமிழில் 1958ம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். அடுத்து இயக்குநர் ஸ்ரீதரின் கல்யாணபரிசு படத்தில் 1959ல் நடித்தார். அடுத்தடுத்து தமிழில் சரோஜா தேவி நடித்த படங்கள் வெற்றி பெற்ற வண்ணம் இருந்தது. இதனால் பார்த்திபன்கனவு, அன்பேவா, ஆசைமுகம், ஆலையமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அடுக்கடுக்காக வெற்றி படங்களில் நடித்து வந்தார். அவரது கொஞ்சும் தமிழும் சிரிப்பும் தமிழ் ரசிகர்களை ஈர்த்தது. வடிவான முகமும் திரையில் பாத்திரித்திற்கு ஏற்ப முகபாவணையும் அவருக்கு நிகர் அவரே என ரசிகர்கள் கொண்டாடினர். துள்ளும் இளம் வயது பெண்ணானாலும் சரி, குடும்பப்பெண் பாத்திரம் ஆனாலும் சரி ரசிகர்களை உலுக்கி எடுக்கும் அளவிற்கு இருக்கும் அவரது நடிப்பு.
சமகாலத்தில் தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த, எம்ஜிஆர், சிவாஜி கணேசனுக்கு சரியான ஜோடி என்றால் சரோஜா தேவி என்றே ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். இதில் எம்ஜிஆர் உடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார்.
பின்பு ஜெமினி கணேசன், எஸ்எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன் என உச்ச நடிகர்கள் அனைவரோடும் கைகோர்த்தார். அந்த நாட்களிலேயே உச்ச நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார்.
இப்படி அடுத்தடுத்து ஓடிக்கொண்டே இருந்த சரோஜா தேவியின் 100வது திரைப்படம் பெண் என்றால் பெண் என்ற தமிழ் திரைப்படமாக அமைந்தது. எனது பிறவி பயன் என்று தமிழ் மொழியையும், தமிழ் திரையுல ரசிகர்களும் எனக்கு அளித்த பெரும் வரம் என சரோஜா தேவி பின்னாளில் தெரிவித்தார்.
தாயின் கண்டிப்பு
இப்படி உச்ச நட்சத்திரமாக இருந்த சரோஜா தேவிக்கு அவரது தாயார் ஒரு கண்டிசன் போட்டார். அது என்னவென்றால் நீச்சல் உடை, கிளாமர் உடை கூடாது என்று. கடைசிவரை தாயின் வார்த்தையை மதிக்கும் மகளாகவே சரோஜா தேவி திகழ்ந்தார்.
விருதுகள்
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, என பல மொழிகளில் சுமார் 200 படங்கள் நடித்த சரோஜா தேவி இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல், தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களுக்காக ஏராளமான மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இப்படி தன் திரைப்பயணத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்த கேரளத்து பைங்கிளி சரோஜா தேவி இன்று தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை இந்துஸ்தான் டைம்ஸ் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.








