
ஏ.ஆர்.ரஹ்மான்
ஆரம்ப காலங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய ரஹ்மான், பின்னர் விளம்பரப் படங்களுக்கு ‘டியூன்’ போட்டுக் கொண்டிருந்தார். அதன்பிறகே இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ‘ரோஜா’ படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ‘ஹிட்’ ஆனது. அதுவரை இல்லாத அளவுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான கேசட்டுகள் விற்றுத் தீர்ந்தன. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதன் பின் தமிழ், மலையாளம், இந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து, பெரும் புகழ் பெற்றார்.
ரஹ்மானின் இசையில் உருவான ‘வந்தே மாதரம்’ பாடல் ஆல்பம் இந்தியர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. நாடி நரம்புகளில் நாட்டுப்பற்று முறுக்கேற்ற அதிகம் விரும்பி கேட்கப்பட்ட பாடலாக திகழ்ந்தது அது. கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட சமயத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து கலைஞர் கருணாநிதி எழுதிய ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது…
அவரின் பிறந்த தினம் இன்று