June 8, 2025
சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்.

சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்.

சிவகங்கை. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம்,மாவட்டஆட்சித் தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்
நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது. அதனை, மேலும் விரிவுபடுத்திடும் பொருட்டு, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், கடந்த இரண்டாம் வெள்ளிக்கிழமை (13.12.2024) அன்று வருவாய் கோட்டளவில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டு, தேவகோட்டை வருவாய் கோட்ட அளவில், சிறப்பாக நடைபெற்றது.

அவ்வாறு, நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுதவிக்குரிய மானியத் தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடவும், குறிப்பாக இக்கூட்டத்தின் வாயிலாக விவசாயிகள் தெரிவிக்
கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து அனைத்து  துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள் உரிய விபரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், பரிசீலனையிலுள்ள கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காணும் பொருட்டு, உரிய களஆய்வுகளும்  மேற்கொண்டு, அந்நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், இணை இயக்குநர் (வேளாண்மை) சுந்தரமகாலிங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த முதன்மை அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.