
பொதும்பு கிராமத்தில் ஸ்ரீ ருணம் தீர்த்த விநாயகர், விஷ்ணு துர்க்கை திருக்கோவில் கும்பாபிஷேக விழா
அலங்காநல்லூர், ஆக:21.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ருணம் தீர்த்த விநாயகர், விஷ்ணு துர்க்கை திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த சிறப்பு யாகசாலை பூஜையில் மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, உள்ளிட்ட 16 வகை சிறப்பு ஹோமங்கள் அதனை தொடர்ந்து மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வளம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பின்னர், சுவாமி சிலைகள் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, குருநாதன் சேர்வை வகையறாக்கள், விழா குழுவினர், பொதும்பு கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.






