
பாரில் குடிப்பதற்கு பெண்களுக்கு சம உரிமை !
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நகரம் எப்போதும் மக்கள் நெருக்கம் நிறைந்த நகரமாகவே காட்சியளிக்கும். அதேபோல் தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதுவரை டாஸ்மாக் மதுபான கடைகளில் ஆண்கள் கூட்டத்தைத் தான் பார்த்திருப்போம்.. ஆனால் பழனி ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, பாரில் குடிப்பதற்கு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதிலும் முன்னுதாரமாக செயல்படும் நகரம் என்பதை நிரூபிக்கும் விதமாக, ஆர் எப் ரோட்டில் ஈஸ்வரன் புரோட்டா ஸ்டால் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில், இரண்டு பெண்கள் ஆண்களுக்கு நிகராக சாவகாசமாக மது குடித்துக்கொண்டே இரண்டு பெண்கள் பேசிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளீர் உரிமைத் தொகை என அரசு எத்தனையோ திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நினைத்தாலும், குடும்பங்களை சீரழிக்கும் குடிப்பழக்கத்திற்கும் சம உரிமை கொடுப்பது நியாயமா என்பதை அரசு யோசிக்க வேண்டும் என குடி மகன்கள் புலம்புகின்றனர்.