
தமிழ், சமஸ்கிருதத்தை வைத்து பிரிவினையை உண்டாக்குபவர்களிடம் சிக்க கூடாது:அர்ஜுன் சம்பத் பேச்சு:
மதுரை:
தமிழ் மொழி தோத்திர மொழி, சமஸ்கிருதம் சாஸ்திர மொழி. இதனை புரிந்து கொண்டு மொழிகளை வைத்து நம்மிடையே பிரிவினை உண்டாக்க நினைப்பவர்களுக்கு நாம் பலியாகக் கூடாது என அர்ஜுன் சம்பத் பேசினார்.
மதுரை எஸ்.எஸ்.காலனியில், உள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில், அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவா குருவார பூஜை நடந்தது. இதில், அர்ஜுன் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது;
நாம் அறிந்த ஜகத்குரு, நடமாடும் தெய்வமாக இருந்தவர் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர். நம்மை என்றும் வழிநடத்தி அருள் பாலிப்பவர் அவர். வியாழக்கிழமை குரு வழிபாட்டுக்கு உகந்த நாள். மதுரை அனுஷசத்தின் அனுக்கிரகம் பல ஆண்டுகளாக குருவார பூஜை நடத்தி வருவதோடு, கடந்த நான்கு ஆண்டுகளாக தினமும் வறியோருக்கும் உணவினை வழங்கி வருகிறது. இதுவே உண்மையான சனாதன தர்மம்.
சனாதன தர்மத்தின் வடிவமே ஸ்ரீகாஞ்சி மகா பெரியவர்தான். அவரது தெய்வத்தின் குரலை படித்தால் எல்லோருக்கும் அந்த உண்மை புரியும்.குருவின் திருவடி எனப்படும் பாதுகை மகத்துவமானது. ராமபிரான், நாட்டை விட்டு சென்றபோது அவரது பாதுகையை வைத்து தான் ஆட்சி செய்தார்கள்.
திருக்குறளின் கடவுள் வாழ்த்து குறள்கள் பத்தில், எட்டு குறள்களில் திருவடிப் பெருமைகளை தான் திருவள்ளுவர் பெருமைப்பட சொல்லி இருக்கிறார். அதுபோல மதுரை அனுஷத்தின் அனுக்கிரகத்தில் காஞ்சி மஹா பெரியவரின் பாதுகை இருக்கிறது. அதனை வழிபடுவது காஞ்சி பெரியவரின் அருளை நாம் பெற வழி வகுக்கும்.
பெருமாளுக்கு உரிய திருத்தலங்களில், அழகர் கோயில் மகத்துவமானது. திருமால் இறிஞ்சோலை எனப்படும் அந்த மலையின் அடிவாரத்தில் பொய்கைக்
கரைப்பட்டியில், அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் காஞ்சி பெரியவருக்கு தனிக்கோயில் அமைக்கும் பணி மகத்துவமான பணி தொடங்கப் பட்டிருக்கிறது. அந்தப் பணிக்கு நாம் எல்லோரும் துணை நிற்க வேண்டும்.
மதுரை ஆன்மீக பூமி, சனாதன தர்மத்திற்கு சாட்சியான ஊர். இங்கு நடந்த, முருக மாநாடு மிகப்பெரிய மாற்றத்தையும் எழுச்சியையும் உண்டாக்கி இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலை, சுப்பிரமணிய சுவாமிக்கு சொந்தமான முருகன் மலை. திருப்பரங்குன்றம் முருகன் தமிழ்நாட்டிற்கு எழுச்சியை கொடுத்திருக்கிறார். இந்து ஒற்றுமை, சனாதன தர்மத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை திருப்பரங்குன்றம் மூலமாக முருகப்பெருமான் வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டி உள்ளார். யார் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
தமிழ்க்கடவுள் முருகன் கோயில் குடமுழுக்கு, தமிழ் மொழியில் நடக்க இருக்கிறது. இறைவனை பாடுவதற்காக உண்டாக்கப்பட்ட மொழி தமிழ். சமஸ்கிருதம் சாஸ்திர மொழி. சாஸ்திரத்தில் பண்ண வேண்டிய மந்திரங்களை அதற்குரிய சமஸ்கிருதத்தில் தான் செய்ய வேண்டும். மந்திரங்களுக்கு மொழி கிடையாது. அது ஒலி வடிவம் கொண்டது. மொழியை சொல்லி யாரும் குழப்பத்தை உண்டாக்கினால் நாம் தெளிவாக இருக்க வேண்டும். குடமுழுக்கு வைபவங்களில் தமிழே இல்லை என்பது போல யாராவது பொய் பிரசாரம் செய்தால் நாம் குழம்பக் கூடாது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் மாமதுரை. சிவபெருமான் முதல் தமிழ் சங்கத்தையும் இரண்டாவது தமிழ் சங்கத்தை முருகனும் போற்றி பாதுகாத்து வளர்த்த நகரம் மதுரை. நாத்திகர்கள், பிற சமயம் சார்ந்தவர்கள் நம்மிடம் குழப்பம் ஏற்படுத்தினால் அதற்கு நாம் பலியாகக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில், அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ண ஐயர், தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ராமன் உட்பட பலர் பங்கேற்றனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை , மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்து இருந்தார்.