
வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளில் முறைகேடு!
மடத்துக்குளம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழைய ஆயக்கட்டு ராஜா வாய்க்கால் கரையோரத்தில் உள்ள புதர்களில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் காற்றில் தீ வேகமாக பரவியது. இதனால் அருகில் உள்ள தென்னை மரங்களில் தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்த உள்ளூர் இளைஞர்கள் சிலர் கணியூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக மடத்துக்குளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்த வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் கேட்டபோது, காரத்தொழுவு பகுதியில் உள்ள பழைய ஆயக்கட்டு ராஜ வாய்க்காலானது கணியூர் அணையாத்தம் பகுதியிலிருந்து ஆரம்பமாகி காரத்தொழுவு அடுத்துள்ள முள்ளங்கிவலசு வரை அடங்கும். வாய்க்கால்கள் மண் வாய்க்கால்களாக இருப்பதால், கரைகள் சரிந்தும், செடி, கொடிகள், புற்கள் என புதர் மண்டியும் காணப்படுகின்றன.
வாய்க்காலை பராமரிப்பு செய்து தூர்வாரும் பணிகளை செய்து செடி , கொடிகளை அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். மடத்துக்குளம் நீர்வளத்துறை அதிகாரிகள் இந்த விசயத்தில் அலட்சியம் காட்டி வருகின்றனர். ராஜ வாய்க்கால் தண்ணீரை கொண்டு சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. நெல் , கரும்பு , மக்காச்சோளம் , வாழை , தென்னை, பயறு வகைகள் போன்ற பல்வேறு விவசாயங்கள் செய்யப்படும் பகுதியாகும். வாய்க்காலை பராமரிப்பு செய்து , செடி கொடிகளை தூர்வாரி, வாய்க்கால் கரைகளை பராமரிப்பு செய்யவும் அரசு நிதியை வழங்கியும் அரசு அதிகாரிகள் அதனை முறையாக பயன்படுத்த தவறி விடுகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வாய்க்கால் முறையாக சீரமைக்காமல் இருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். வாய்க்கால் கரையோரங்களில் நானல் புதர்கள் , முட்புதர்கள் அதிகமாக உள்ளதால் வயல்களில் இருந்து நெல் மூட்டைகளை எடுக்க வரும் வாகனங்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளது. இதுசம்பந்தமாக மடத்துக்குளம் நீர்வளத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. விவசாயிகள் பலமுறை கோரிக்கையாக முன்வைத்தும் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக தெரிவிக்கின்றனர்.