
சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் பொதுமக்கள்.!மாவட்ட ஆட்சியரின் பதிலால் கதிகலங்கிப்போன கிராம மக்கள்.!
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சி பழையூர் பகுதியில் சட்டவிராதமாக மது விற்பனை நடந்து வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் ஊர் திருவிழா நடைபெற உள்ள காரணத்தால் மது விற்பனை செய்யக்கூடாது என ஊர் பெரியவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளனர்.

மது விற்பனை செய்தவர்களில் கோபி மற்றும் தேவேந்திரன் ஆகிய இருவருடனும் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். அதில் , மறைத்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை அடித்து உடைத்துள்ளனர். மேலும் இதுசம்பந்தமாக திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்து சம்பந்தப்பட்ட கோபி, தேவேந்திரன் ஆகிய இருவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சிறுமலை ஊராட்சி பகுதியில் அரசு மதுபானக்கடை துவங்க மாவட்ட நிர்வாகம் சார்பாக இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றதை அடுத்து அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிறுமலை பகுதியில் மதுக்கடை திறக்க கூடாது எனக்கூறி சிறுமலை பழையூறை சேர்ந்த சிவக்குமார், செந்தில்குமார், ஆனந்த், மற்றும் கிராம பொதுமக்கள் பலருடன் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் இன்று நடைபெற்ற மனுநீதி முகாமில் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க சென்றுள்ளனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் மனு கொடுக்க வந்தவர்களிடம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுத்து விட்டீர்கள். அதனால் தான் புதிய டாஸ்மாக் கடை கொண்டுவதற்கான முயற்சியை சட்டரீதியாக அரசாங்கம் எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக விற்பனை செய்யும் பொழுது பிரச்சனை செய்யாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் கடை வரப்போவது இல்லை. இப்போது சட்டவிரோத மது விற்பனையையும் நீங்கள் தடுத்து விட்டீர்கள். அடுத்து அங்கே கடை திறப்பது தானே சரி என்பதாக மனு கொடுக்க சென்ற சிறுமலை பொதுமக்களை பார்த்து பேசியது அவர்களிடம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மது விற்பனைக்கு அத்தனை ஆர்வம் காட்டும் அரசு எந்திரம் அரசின் மற்ற துறைகளில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சட்டவிரோத மது விற்பனையை தடுத்தால் அரசு அனுமதியுடன் சட்டபூர்வமான மதுபானக்கடை திறக்கப்படும் என்பதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் பதில்கள் நமக்கு சிறந்த பாடத்தை கற்றுத்தருகிறது.