June 30, 2025
உலக பெருங்கடல் நாள்.. வாழ்த்துக்கள்!

உலக பெருங்கடல் நாள்.. வாழ்த்துக்கள்!

(ஐ நா பெருமன்றம்- (9/6/2025)

வந்து பேசும் அலையோடு வருடும் காற்றின் முகத்தோடு
காணும் தொலைவு கண்ணோடு கலந்து நிற்கும் கடலோடு
வாழும் நாங்கள் படகோடு வருவோம் தாயே உன்மீது
வாரிக் கொடுப்பாய் தவறாது அதனால் நாங்கள் மண்மீது
இரண்டு பக்கமும் உறவாக இருக்கும் எங்கள் ஊராக
நீதான் எங்கள் பசிக்குணவு நீதான் எங்களின் உயிர் உறவு!.
நீர்தான் எங்களின் திருக்கோயில் நீர்தான் எங்களின் முத்துக் குளிப்பு
நீதான் உலகின் மழையடிப்பு நீதான் மண்ணின் பயிர் வளர்ப்பு!
வலையை வீச மீன் கொடுப்பாய் வற்றிய உடலுக்கு உணவளிப்பாய்
சுவையாய் சுவைக்க உப்பளிப்பாய் சுழலும் உலகிற்கு விருந்து வைப்பாய்!
எத்தனை காலங்கள் இதுபோன்று இருந்தாய் எமக்கு உயிர் போன்று
இன்றோ பலப்பல இடையூராய் இயங்கும் உலகம் வேடிக்கையாய்..
அறிவு யென்று கேடுகளாய் அக்கறையின்றி கழிவுகளால்
நீருக்குள்ளும் புதையல்களாய் நெருக்கடியில் உன் பிள்ளைகளாம்
எங்கும் பலவகை தாக்குதலாய் எரியும் நெருப்பாய் போக்குகளாய்
சுற்றுப் புறங்கள் ஆலைகளாய் தோண்டி எடுக்கும் ஆசைகளாய்
நண்டு நத்தைகள் ஓலமிட நாவாய் கப்பல்கள் கூச்சலிட
உயிர்கள் தோன்றிய கடலம்மாள் உருக் குலைந்தாளே பலவாலே
நலங்கள் மீட்க புதிதாவாள் நன்மைகள் விளைக்கும் உறவாவாள்
தேடிப் போகும் சிறப்பானதாகும் சிந்திதாலே பயனாவாள்
வணங்கியேற்ற வேண்டுவமே வாழ்த்தி சிறக்க போற்றுவமே
எல்லா துன்பமும் இடர்படவே இனிதாய் தாயை வணங்குவமே..
மக்கள் வாழிடம் சுற்றிக் கடல் மண்ணும் அதனுள் இருக்கும் உடல்
ஓடும் குருதியை கெடுத்துவிட்டு கொஞ்சல் வருமா சொல்வீரே!..
எத்தனைக் கோடி ஆண்டுகளோ இக்குவலயம் தோன்றித் தெரியாது
புல்லும் பூண்டும் வளர்த்தவளே பொய்க்க செய்வதை தவிர்க்காது..
அப்படியென்ன சுகம் வேண்டும் அல்லல் செய்தா பெற வேண்டும்?
துய்த்துக் கெடுக்கும் அறிவோரே துன்ப நிலையை மாற்றிடவே!..
தாயும் பிள்ளையுமாய் கடன் செய்ய கணித்து நடந்து புகழ் செய்ய
வறட்டுத் தனங்களை விட்டெழுந்து வாழ்த்துக்கள் சொல்வோம் தலைநிமிர்ந்து!.
தங்கக் கடலை தழுவி நின்று தவறுகள் செய்வதை விட்டெழுந்து
வாழும் மக்களின் வலி உணர்ந்து வாழ்த்தி எழுவோம் தலை குணிந்து!
இயற்கையை வளர்த்தல் பெருஞ்செல்வம் ஏய்த்துப் பிழைத்தால் அது கொடுமை
கொடுக்கும் கைகளை முறிப்பதற்கா கும்பிடும் கைகள் கையெழுத்திடும்?
மாற்றங்கள் வேண்டும் மக்களிடம் மதிப்பாய் வணங்க நம் தலைமுறைகள்..
அதற்கே இங்கு வாழ்வுரிமை அதுதான் மக்களின் தன்னுரிமை!
இன்றதை பேசும் நன்னாளே இருக்கும் கடலாள் தொடர் வாழ்வே!.
கோடிக் கோடி ஆண்டுகளோடும் தொடர நிலைக்கட்டும் கடலவள் வாழ்வே!

வணக்கம்.

அன்புடன்
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

இது உலக மக்களின் உணர்வாக எழும் தமிழ்நாட்டு கரை வாழ் மக்களின் முன்னெடுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.