
உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி.
உசிலம்பட்டி:
மதுரை,
உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வருவாய் தீர்ப்பாய முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கோரிக்கை மனுக்களை மதுரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் முழுவதும் இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை ஜமபந்தி எனும் வருவாய் தீர்ப்பாய முகாம் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர்.
இன்று கருமாத்தூர் உள் வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களும், நாளை வாலாந்தூர், 16 ஆம் தேதி சிந்துபட்டி, 20 ஆம் தேதி உத்தப்பநாயக்கணூர், 22 ஆம் தேதி உசிலம்பட்டி உள் வட்ட அளவிலான கிராம மக்கள் நேரில் வந்து மனுக்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றம், வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உடனுக்குடன் ஆய்வு செய்து விரைவில் தீர்வு எட்டப்படும் என வருவாய் அலுவலர்கள் தெரிவித்தனர்.






