
உசிலம்பட்டி அருகே, முத்தாலம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு - இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சப்பர தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில், அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சப்பர தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சுமார் 31 அடி உயரமுள்ள தேர் முத்தாலம்மன் கோவிலிலிருந்து கிராம தெருக்களில் ஊர்வலமாக கைத்தாங்கலாக தூக்கி சென்று கருப்பசாமி கோவிலில் இறக்கி வைக்கப்பட்டது.
இந்த தேர் திருவிழாவின் போது பக்தர்கள் முளைப்பாரி, ஆயிரம் கண்பானை, பைரவர் சிலை எடுத்தும், காளி வேடம், பூதங்கள் வேடம், ஆண்கள் பெண்கள் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பர தேர் தரிசனம் செய்து திருவிழாவை கொண்டாடினர்.