
பஞ்சமி நிலத்தை நான் வாங்கவில்லை ஓபிஎஸ் பேட்டி!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் , தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கடந்த சில நாட்களாக பஞ்சமி நிலத்தை நான் பெற்றதாக குற்றம் சாட்டி வெளிவந்த செய்திகள் குறித்து விளக்கமளித்தார்.நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலம் இல்லா ஏழை எளியவர்களுக்காக அரசு வழங்கிய நிலமாகும்.
நாளடைவில் நிலத்தின் உரிமையாளர்களே நிலத்தினை பெற்று அவற்றை பங்கு பிரித்து நிலத்தின் மூதாதையரான ஜெயலட்சுமி என்பவரது பின்வாரிகள் பெயரில் 40, 41 செண்டுகள் என இரண்டாக பிரிக்கபட்டு அவை மாற்று சமூகத்தைச் சார்ந்த வேறொரு நபரது பெயரில் பத்திரம் ஏற்பட்டு பின்னாளில் அவற்றை நான் கடந்த 2022 ல் விலைக்கு வாங்கினேன். மேலும் மேற்படி நிலத்தில் பிரச்சினைகள் இருப்பது எனது கவனத்திற்கு தெரியவர கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் எவர் ஒருவரிடம் இருந்து நிலத்தை பெற்றேனோ, அவரிடமே நிலத்தை விற்றுவிட்டேன்.
ஆகவே அந்த நிலத்திற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. தற்போது வரை அவை பஞ்சமி நிலமில்லை. மேலும் எஸ்ஸி, எஸ்டி ஆணையம் சார்பில் எனக்கு எந்த ஒரு கடிதமும் வழங்கவில்லை என தெரிவித்தார்.
அதிமுகவில் நான், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் கூக்குரலாக உள்ளது என்றும் தன்னைப் பொறுத்தவரை அதிமுகவில் இணைவதற்கு எந்த விதமான நிபந்தனையும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அஇஅதிமுகவுக்கு வாழ்வு. இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான் ” எனக் கூறினார்.