June 8, 2025
தை மாத பிரதோஷம்… பிறை சூடிய பெருமானை வழிபட மறவாதீர்கள்…!!

தை மாத பிரதோஷம்… பிறை சூடிய பெருமானை வழிபட மறவாதீர்கள்…!!

தை மாதத்தில்தான் சூரியன் வட அரைக்கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் தொடங்குகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌ம்.

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் தை மாதம் 14-ம் தேதி (27.01.2025) பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

நமது மனதில் தோன்றும் பல்வேறு சிந்தனைகளுக்கு மனோகாரகனான சந்திரனே காரணம். அதனால் சந்திரனை பிறையாக சூடிய எம்பெருமானை இந்நன்னாளில் தரிசிப்பது எண்ணிலடங்கா நன்மைகளை நமக்கு அருளும்.

அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும்.

திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் ‘சோமவாரப்பிரதோஷம்” ஆகும். திங்கள்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும். சுபிட்சம் உண்டாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வழிபாடு :

பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜெபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம்.

பிரதோஷ பலன்கள் :

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.

பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.