
பெரியகுளம் தீர்த்தத் தொட்டியை தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்
தேனி மாவட்டம் பெரியகுளம் – சோத்துப் பாறை அணை செல்லும் வழியில் தீர்த்த தொட்டி அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இங்கிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று வழிபாடு நடத்தி வருவது வழக்கம்.
தென்கரை பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் இத்தீர்த்தத் தொட்டி பராமரிக்கப்பட்டு வருகின்றது. விடுமுறைக் காலங்களில் சிறுவர்கள் இங்கு குளித்தும், நீச்சல் பழகியும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக தீர்த்தத் தொட்டி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் மாசடைந்து காணப்பட்டன.
இவை சம்மந்தமாக 1வது வார்டு கவுன்சிலர் குமரேசன், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரது கோரிக்கையாக பேரூராட்சி தலைவரிடம் முன்வைத்துள்ளார். இவற்றை கவனத்தில் கொண்ட தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், தீர்த்தத் தொட்டியின் புனிதம் காக்கும் வகையில், பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் தமது நேரடி மேற்பார்வையில் தூய்மைப்படுத்தி வருகின்றார்.
தொடர்ந்து திருவிழாக் காலங்கள் வருவதால் தீர்த்தத் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தென்கரை பேரூராட்சி தலைவருக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.