
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி? எங்களுக்கு ஒரு நீதியா? - ஒட்டன்சத்திரத்தில் த.வெ.க வேட்பாளர் மோகன் ஆவேசம்!
ஒட்டன்சத்திரம் | ஏப்ரல் 4, 2026
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வயலூர் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மோகன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொப்பம்பட்டி ஒன்றிய நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மாவட்ட மற்றும் நகரப் பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வேட்பாளர் மோகன், காவல்துறை மற்றும் ஆளுங்கட்சியினர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
காவல்துறையினர் ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறார்கள்
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: “நாங்கள் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி ஒவ்வொரு ஊராகச் சென்று அமைதியான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினர், ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறார்கள். எங்கு சென்றாலும் ‘அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே’ என்று கூறி எங்களுக்கு அனுமதி மறுப்பதன் மூலம் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.”
விதிமீறல்களுக்குப் பாதுகாப்பு?
தொடர்ந்து பேசிய அவர், “ஆளுங்கட்சியினர் பிரச்சாரத்திற்கு விதிகளுக்குப் புறம்பாக டாட்டா ஏசி வாகனங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஏற்றிச் செல்கின்றனர். அவர்களுக்குக் குடை பிடித்துக் கொண்டு முழு பாதுகாப்பு வழங்கும் காவல்துறை, தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஏன்? காவல்துறை ஆளுங்கட்சியின் மாவட்ட மற்றும் நகரச் செயலாளர்களின் வழிகாட்டுதலின்படியே இயங்குகிறது,” என்று சாடினார்.
எம்.எல்.ஏ மீதான விமர்சனம்
“மக்களுக்குப் போலீஸ் நண்பன் என்று கூறும் அரசு, காவல்துறையை அராஜக வேலைகளுக்குப் பயன்படுத்துகிறது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் ஒரு ‘போலீஸ் மந்திரி’ போல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். இந்த ஜனநாயக விரோதப் போக்கை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்,” எனத் தெரிவித்தார்.
பங்கேற்பாளர்கள்
இந்த நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கார்த்திக் ராஜன், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஒன்றிய இணைச் செயலாளர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ஷாருக்கான், ரமேஷ், மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் சதிஷ் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் நா.ராஜாமணி.






