June 8, 2025
தமிழக அரசு பள்ளி பெயர் பலகை மாற்றம் குறித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டசபை மானிய கோரிக்கையில் வலியுறுத்திப் பேச அமைச்சருக்கு மனு

தமிழக அரசு பள்ளி பெயர் பலகை மாற்றம் குறித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டசபை மானிய கோரிக்கையில் வலியுறுத்திப் பேச அமைச்சருக்கு மனு

நிலக்கோட்டை, ஏப்.29 – நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு சீர் மரபினர் நலவாரிய மாநில உறுப்பினர் சந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
இந்திய வரலாற்றில் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து1871 முதல் 50 ஆண்டுகாலம் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி 1920 ஏப்ரல் 3 அன்று நடந்த தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் எதிரொலியாக உருவாக்கப்பட்ட பள்ளிகள் தான் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகள்.

இப்பள்ளிகள் அமைந்திட அந்த காலத்தில் கள்ளர் காமன் பண்டு மூலம் நிதி திரட்டி இடம் அளித்து கட்டிடங்கள் கட்டி பள்ளிகள் உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்… அதற்கு ஆதாரங்களாக இன்றளவும் பல்வேறு பள்ளிகளின் நில அளவை பட்டாக்கள் அனைத்தும் கள்ளர் காமன் பண்டு நிலம் என்ற பெயரிலேயே உள்ளது.இப்பள்ளிகள் 100 ஆண்டுகள் கடந்து தமிழகத்திலேயே அரசு பள்ளிகளில் முன்னோடிகளாக திகழ்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட பள்ளி அதே பெயரில் தொடர்ந்து செயல்பட வேண்டும் அதை பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் சார்பாக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கையாக இந்த மனுவை சமர்ப்பிக்கிறோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் அளித்த பெயர் பலகைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சாதிப் பெயரை நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது எதிர்த்து தமிழக அரசும் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் சாதி பெயர் அடையாளம் ஒவ்வொருவருக்கும் ஆரம்பப்பள்ளி முதல் வேலைவாய்ப்பு வரை மிக முக்கியமாக இட ஒதுக்கீட்டுக்காக தேவைப்படுகிறது…
நாம் போற்றி பாதுகாக்கும் அரசியலில் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முதல் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் வரை சாதி அடிப்படையில் ஆன இன சுழற்சி தொகுதி ஒதுக்கீடு அடிப்படையில் தான் நடைபெற்று வருகிறது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்…

இதில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தமிழ்நாடு சமூக நீதி அடிப்படையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் எங்கோ நடக்கும் ஒரு பிரச்சனைக்காக இந்த வரலாற்று அடையாளப் பள்ளிகளை மறைக்க நினைப்பதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் பேச வலியுறுத்தி மனுவை அளித்தனர்.

அப்போது பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம், மாநில பொருளாளர் இளங்கோ, மாநிலப் பிரச்சார அமைப்புச் செயலாளர் சிங்கராஜ் மற்றும் பலர் இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு சீர் மரபின நல வாரிய உறுப்பினர் சந்திரன் இது குறித்து பிற்படுத்தப்பட்டோர் அமைச்சரிடம் முறையாக அணுகி நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.