March 4, 2026
சரித்திரத்தை மாற்றிய பாடல்

சரித்திரத்தை மாற்றிய பாடல்

தமிழ் சினிமா சரித்திரத்தை,அது சென்று கொண்டிருந்த பாதையை,

அது தமிழ் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்த பங்களிப்பை அதனினும் உயர்ந்த,ஏன் உலகமே திரும்பிப்பார்த்து வியக்க வைத்த பெருமை இந்தப் பாடலில் நடித்த இளைஞரையே சாரும்.தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களிலும் எதிரொலித்த பெருமை இந்தப் பாடலுக்குண்டு.அந்த இளைஞரின் கண் அசைவும் காலசைவும் கூட கூர்ந்து கவனிக்கப்பட்டன.பெரும் பேரிகைகள் கூட ஏற்படுத்த முடியாத கிளர்ச்சியை அந்த இளைஞரின் ஒரு விரலசைவு ஏற்படுத்தியது.

அவருடைய கண்களின் தீட்சண்யத்தை தாங்கும் சக்திகள் கூட அவர் எதிரில் நின்றுபேச தயக்கம் காட்டியது .ஒரு மனிதனின் மூலம் இத்தனை கலை நுட்பங்களை சகல அவயங்களிலும் வெளிப்படுத்தமுடியுமா?என்று வியப்புண்டாயிற்று.அந்த வியப்பு பிரமையாய் மாறி அந்த பிரமையிலிருந்து மக்கள் விடுபடும் முன்னரே அந்த இளைஞனின் அடுத்தடுத்த நடிப்புக்கணைகளால்

தாக்குண்டு அந்த பிரமையிலிருந்து விடுபட இயலாத நிலைமை இன்று வரை தொடர்கிறது.

அது எந்த திரைப்படம் என்பதையும் அந்த நடிகர் யார் என்பதையும் தமிழ்நாட்டில் கேட்டால்அதற்கான பதிலை கோடி உதடுகள் உரக்கச்சொல்லும்.

அந்த இளைஞரை தான் நடிப்புலக மகானாக பின்னாட்களில் தமிழ்மக்கள் தம்நெஞ்சங்களில்

ஏற்றிக்கொண்டனர்.

அவரின்சிறுசிறு அசைவுகள் கூட ஒரு பிரளயத்தையே திரையரங்குகளில் ஏற்படுத்தியது.

குணசேகரனாக அவதாரம் எடுத்த

அந்தக் காவியத்தில் ,தீப்பிளம்பு போல் வந்து

நின்று தாண்டவமாடிய அந்தப் பாடலை பார்த்தோமானால் நம்மை

மீறிய ஒரு உணர்ச்சி உடலிலே பரவுவதை உணரலாம்.

சின்ன அசைவுகள்தான்.

இசைக்குத் தகுந்தபடி தலையாட்டலிலும் உடலசைவிலும்காட்டப்படும் அந்த புது விதமான நடிப்பு , இப்பொழுது கூட சிந்தையிலபெரும் வியப்பை விதைக்கின்றது என்றால் அன்று வந்த காலகட்டத்தில் அது எத்தனை பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

முழங்கால் அளவுக்கு சுருட்டிய பேன்ட்,இன் செய்யப்பட்டும்,முன் நெற்றிக்கு சற்று மேலே அணிந்த தொப்பியும்,முழங்கை அளவுக்கு மடித்த சர்ட்டும் அணிந்த அந்த உருவம்தானே உலகத்தரம் வாய்ந்த முத்திரையாக மாறிய கதையை அப்பொழுதல்லவா அரங்கேற்றியது.

உடம்பை திருப்பி கால்களை விந்திவிந்தி நடந்து ஆடியபடி ஆரம்பிக்கும் அந்த வித்தியாசமான நடையுடன் ஆடும் ஆட்டத்தை திரையுலகம் இன்றுவரை வியப்புடன்தானே பார்த்துக்கொண்டிருக்கிறது.

அப்படியே சென்று தண்ணீர் பைப் திட்டை பச்சைக்குதிரை தாண்டி அதே குதூகலத்துடன்

திட்டின் மேல்நின்று,

“தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்

காசுமுன் செல்லாதடி – குதம்பாய்

காசு முன் செல்லாதடி.”

பொதுஜனப் பார்வையாளர்கள் அதிகம பேர் ஒரு நடிகருக்கு ரசிகர்களாக மாறியது இந்தப்பாடலுக்காகத்தான் தான் இருக்கும்.

காசு எனும் போது சுண்டிக்காட்டுவது,

தொப்பியை சரி செய்வது

இது போன்ற மின்னலாய் வந்து போகும் அந்த சின்னஞ்சிறு ஷாட்களில கூட நடிப்பின் வீச்சு கூர்மையாக இருக்கும்.

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்

காசுக்குப் பின்னாலே – குதம்பாய்

காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப்

(இமைக்காமல் உற்று கவனித்தால் மட்டுமே இந்த இடத்தில் அவர் போடும் அசத்தலான ஸ்டெப்பை பார்க்கமுடியும்.)

அது போனபின்

சாட்சி கோர்ட்டு ஏறாதடி – குதம்பாய்

சாட்சி கோர்ட்டு ஏறாதடி.

நாடக சபாக்களில் இருந்தபோது எல்லோருக்கும் கிடைத்த அனுபவமும் பயிற்சியும்தானே இவருக்கும் கிடைத்திருக்கும்? ஆனால் அதையெல்லாம்

மீறிய அதிசய நடிப்பை முதல் படத்திலேயே எப்படி வெளிப்படுத்தினார்? என்பதுதான் அப்போதைய கலைஞர்களின் கேள்வியாக இருந்திருக்கும் என்பது திண்ணம்.

பைபையாய் பொன் கொண்டோர்

பொய் பொய்யாய் சொன்னாலும்

மெய் மெய்யாய் போகுமடி – குதம்பாய்

மெய் மெய்யாய் போகுமடி.

பெருமாள் முதலியாரின் இலட்சியம் எவரெஸ்ட் தொட்டதும்,

கணேசனை தவறாக எடை போட்டவர்களின் கணிப்பு தரைமட்டமும் ஆகியிருக்கும் இப்பொழுது.

கைகளை பக்கவாட்டில் மேலே தூக்கி,விரல்களை விரித்தும், சுழற்றிக்கொண்டும் சுற்றி சுற்றி ஆடும் அந்த ஆட்டத்தை,கடும் நடன பயிற்சி பெற்றவர்கள் கூட அவ்வளவு அழகாக வெளிப்படுத்தமுடியுமா?

நல்லவரானாலும் இல்லாதவரை

நாடு மதிக்காது – குதம்பாய்

நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்

வெள்ளிப் பணமடியே – குதம்பாய்

வெள்ளிப் பணமடியே

பாடிக்கொண்டே சூதாடிகளிடமிருந்து பணத்தை தூக்கிக்கொண்டு,

சடாரென்று திரும்பி கைககளை ஆட்டிக்கொண்டே கால்களை மாற்றி மாற்றி குத்தாட்டத்தில் கலக்கியெடுப்பார்.

ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டம் தான்.ஆனாலும் அது விளைவித்த பாதிப்பு? அதை நாடே அறியும்.

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – காசு

காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

தெருக்கூத்தாட்டத்தை ஏளனமாக பார்க்கும் எண்ணத்தை கொண்டவர்கள் யாராவது இந்த ஆட்டத்தை பார்த்தால் அவர்கள் தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.அந்த தெருக்கூத்தைஅவர் பார்த்ததால்தானே நமக்கு இந்த சிவாஜிகணேசன் கிடைத்தார்.அதற்கு பிரதியுபகாரமாக இந்த காட்சியின் மூலம்அதற்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்து விட்டாரல்லவா!

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே

உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே – காசு

முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே –

தாண்டவக்கோனேவை இழுக்கும்போது பெரியவரின் மேல் சாய்ந்திருப்பார்.அப்போது பின் முதுகு குலுக்கலில் எதிரொலிப்பார் தாண்டவக்கோனே என்பதில் ‘னேனேனேனேனே ‘என்பதை. உடல்மொழி நடிப்பை உலகிற்கு காட்டிய அவதார புருஷனல்லவோ அவர்.

மூக்கைச்சிந்தி பெரியவரின் மேல் துடைத்துவிட்டு ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.யப்பா.என்ன பார்வை அது?என்ன ஒரு தீட்சண்யமான பார்வை.மின்னல் மின்னி விட்டுப் போவது போலே.

பிணத்தைக்

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பணப்

பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

பாடலின் முடிவில் நடக்கும் நடை,தொப்பி வீசும் ஸ்டைல்,அந்த கையசைப்பு,நடந்து செல்லும் கம்பீரம்

எல்லாம்,

மற்ற இந்திய சினிமாக்களையெல்லாம் புறந்தள்ளி வரலாறானது தனிக்கதை.

செந்தில்வேல் சிவராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *